தொடக்க வீரர்கள் சொதப்பல்: இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து


தொடக்க வீரர்கள் சொதப்பல்: இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 8:29 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறி

மான்செஸ்டர், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.

நியூசிலாந்து 239 ரன்

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் அதன் பிறகு ஆட்டத்தை தொடர இயலவில்லை.

அரைஇறுதிசுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பதால் மறுநாள் இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி எஞ்சிய 23 பந்துகளை நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி மேற்கொண்டு 28 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. ஜடேஜாவினால் சூப்பராக ரன்–அவுட் செய்யப்பட்ட ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 74 ரன்கள் (90 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

கோலி, ரோகித் 1 ரன்

பின்னர் 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நடப்பு தொடரில் 5 சதங்கள் விளாசிய சாதனையாளரான ரோகித் சர்மா (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய ‘அவுட் ஸ்விங்’கில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி (1) டிரென்ட் பவுல்ட்டின் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, டி.வி. ரீப்ளேயில் பந்து லேசாக ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்சை தட்டுவது தெரிந்தது. கள நடுவரின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்று 3–வது நடுவர் கூறியதால் கோலி அதிருப்தியுடன் நடையை கட்டினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (1 ரன்) பந்தை விடுவதா? வேண்டாமா? என்ற குழப்பத்திற்கு மத்தியில் பந்தை தொட்டு விக்கெட் கீப்பர் லாதமிடம் பிடிபட்டார்.

மோசமான பவர்–பிளே

பேட்டிங் தூண்களான டாப்–3 வீரர்களும் வந்த வேகத்தில் அடங்கியதால் இந்திய அணி ஊசலாடியது. அடுத்து வந்த தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு அணியை தூக்கி நிறுத்த கிடைத்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறினார். கார்த்திக் (6 ரன், 25 பந்து) ஹென்றி வீசிய பந்தை அடித்த போது, மிக தாழ்வாக சென்ற பந்தை ஜேம்ஸ் நீ‌ஷம் பாய்ந்து விழுந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து பிரமிக்க வைத்தார்.

‘பவர்–பிளே’யான முதல் 10 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 24 ரன்களுடன் தத்தளித்தது. இந்த உலக கோப்பையில் ‘பவர்–பிளே’யில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இதுதான்.

பண்ட் 32 ரன்

ஆடுகளத்தில் லேசான ஈரப்பதம், மேகமூட்டமான வானிலை இது போன்ற சீதோஷ்ண நிலையில் முதல் ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்து விட்டால் அதன் பிறகு ரன்கள் திரட்டுவது எளிதாகி விடும். அதை கூட உணராமல் இந்திய வீரர்கள் முக்கியமான போட்டியில் சொதப்பி எரிச்சலடைய வைத்தனர். இதைத் தொடர்ந்து 5–வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்டும், ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து மீட்டெடுக்க போராடினர்.

ஒரு பக்கம் புயல்வேக பந்து வீச்சு, இன்னொரு பக்கம் மிட்செல் சான்ட்னெரின் துல்லியமான சுழல் தாக்குதல் என்று நியூசிலாந்து இடைவிடாது குடைச்சல் கொடுத்தது.

ஸ்கோர் 71 ரன்களை (22.5 ஓவர்) எட்டிய போது ரிஷாப் பண்ட் (32 ரன், 56 பந்து, 4 பவுண்டரி) தேவையில்லாமல் சான்ட்னெரின் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இதே போல் ஹர்திக் பாண்ட்யாவும் (32 ரன், 62 பந்து, 2 பவுண்டரி) சிக்சருக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை தாரை வார்த்தார். இதனால் இந்திய அணி மறுபடியும் தடம் புரண்டது. அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் (30.3 ஓவர்) எடுத்திருந்தது.

போராடிய ஜடேஜா–டோனி

இந்த இக்கட்டான சூழலில் விக்கெட் கீப்பர் டோனியும், ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை படிப்படியாக நிமிர வைத்தனர். நீ‌ஷம், சான்ட்னெரின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு குஷிப்படுத்திய ஜடேஜா 39 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். உலக கோப்பை கிரிக்கெட்டில் 8–வது வரிசையில் இறங்கி அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையோடு அவர் தொடர்ந்து மட்டையை சுழட்டினார். அவருக்கு டோனி நன்கு ஒத்துழைப்பு தந்தார். இவர்கள் ஆடிய விதம் இந்தியாவுக்கு சற்று நம்பிக்கையை துளிர்விடச் செய்தது. அதே சமயம் உற்சாகத்தில் திளைத்த நியூசிலாந்து வீரர்கள் பதற்றத்திற்கு உள்ளானார்கள். இருப்பினும் பந்து வீச்சில் சாதுர்யமாக செயல்பட்ட நியூசிலாந்து பவுலர்கள் அவ்வப்போது யார்க்கர் மற்றும் வேகம் குறைந்த பந்துகளை வீசி மிரட்டினர்.

கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பரபரப்பான கட்டத்தில் ஜடேஜா (77 ரன், 59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அதன் பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் டோனி மீது திரும்பியது. போராடிய டோனி (50 ரன், 72 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்–அவுட் ஆக இந்தியாவின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது. உலக கோப்பையில் தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய 38 வயதான டோனி, அணியை கரைசேர்க்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.

இந்திய அணி தோல்வி

இறுதி ஓவரில் வெற்றிக்கு 23 ரன் தேவையாக இருந்த போது பவுண்டரி அடித்த யுஸ்வேந்திர சாஹல் (5 ரன்) இதன் 3–வது பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி, போட்டியில் இருந்து வெளியேறியது.

சர்வதேச அரங்கில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக கருதப்படும் இந்திய அணியின் மானம் மான்செஸ்டரில் பறிபோனதால் ரசிகர்கள் நொந்து போனார்கள். குறைந்த இலக்கை இந்திய அணி எப்படியும் எட்டிப்பிடித்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இன்னும் பலர் தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு துக்க தினமாகவே அமைந்து விட்டது எனலாம்.

நியூசிலாந்து அணி

அதே நேரத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய நியூசிலாந்து அணி 2–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதுவரை உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணி ஏற்கனவே 2015–ம் ஆண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நியூசிலாந்து அணி வருகிற 14–ந்தேதி லண்டன் லார்ட்சில் அரங்கேறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.

4–வது முறையாக அரைஇறுதியுடன் வெளியேற்றம்

*உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் தோற்பது இது 4–வது நிகழ்வாகும். ஏற்கனவே 1987, 1996, 2015–ம் ஆண்டுகளிலும் அரைஇறுதியுடன் வெளியேறி இருந்தது.

*2015–ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2–வது பேட்டிங் செய்து 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதே போல் இந்த முறையும் இலக்கை விரட்ட முடியாமல் இந்தியா பணிந்திருக்கிறது.

*உலக கோப்பை கிரிக்கெட்டில் லீக்கில் அசத்தும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு கால்இறுதி, அரைஇறுதி, இறுதிப்போட்டி போன்ற ‘நாக்–அவுட்’ சுற்று ஆட்டங்கள் என்றாலே அலர்ஜியாகி விடுகிறது. அதாவது 2011–ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து இதுவரை நாக்–அவுட் சுற்று ஆட்டங்களில் 24, 9, 35, 3, 1, 1 ரன் வீதம் எடுத்து சோடை போயுள்ளார்.

*இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் 27 ரன்கள் எடுத்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவரான ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தது. அந்த பொன்னான வாய்ப்பை ரோகித் சர்மா கோட்டை விட்டு விட்டார். இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மா 9 ஆட்டங்களில் ஆடி 6 சதம் உள்பட 648 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

*இந்திய அணி கடைசியாக ஆடிய 5 ஐ.சி.சி. தொடர்களிலும் முக்கியமான கட்டத்தில் தோற்று வெளியேறி இருக்கிறது. அதாவது 20 ஓவர் உலக கோப்பையில் 2014–ம் ஆண்டில் இறுதி ஆட்டத்திலும், 2016–ம் ஆண்டில் அரைஇறுதியிலும், 50 ஓவர் உலக கோப்பையில் 2015 மற்றும் 2019–ல் அரைஇறுதியிலும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 2017–ம் ஆண்டில் இறுதி ஆட்டத்திலும் தோல்வி கண்டிருக்கிறது.


Next Story