நடுவருடன் வாக்குவாதம் இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்க்கு அபராதம்


நடுவருடன் வாக்குவாதம் இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்க்கு அபராதம்
x
தினத்தந்தி 12 July 2019 10:00 PM GMT (Updated: 12 July 2019 8:17 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் (85 ரன்கள், 65 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.

பர்மிங்காம், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் (85 ரன்கள், 65 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) அதிரடியாக ஆடி ரன் குவித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாசன் ராய் 20–வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை அடித்து ஆட முயன்றார். அந்த பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அவுட் கேட்டு முறையிட்டார். உடனே நடுவர் தர்மசேனா அவுட் என்று விரலை உயர்த்தினார். இதனால் அதிருப்தி அடைந்த ஜாசன் ராய் பந்து பேட்டில் படவில்லை என்று நடுவருடன் வாக்குவாதம் செய்தார். அந்த சமயத்தில் இங்கிலாந்து அணியிடம் டி.ஆர்.எஸ். வாய்ப்பு இல்லாததால் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய முடியவில்லை. கோபத்துடன் வெளியேறிய ஜாசன் ராய் திட்டியபடி பெவிலியன் திரும்பினார். டி.வி. ரீபிளேயில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெரிந்தது. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது விதிமுறையை மீறிய செயலாகும். இந்த சம்பவம் குறித்து நடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து ஐ.சி.சி. விசாரணையை நடத்தியது. விசாரணை முடிவில் ஜாசன் ராய் விதிமுறையை மீறி செயல்பட்டு இருப்பதால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருப்பதுடன், 2 தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக அளிக்கப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி. தெரிவித்து இருக்கிறது. குறைந்த தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டதால் தடையில் இருந்து ஜாசன்ராய் தப்பினார். இந்த போட்டி தொடரில் ஜாசன் ராய் 6 ஆட்டங்களில் ஆடி 426 ரன்கள் குவித்துள்ளார்.


Next Story