ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி; ஸ்டீவ் வாக் புகழாரம்


ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி; ஸ்டீவ் வாக் புகழாரம்
x
தினத்தந்தி 13 July 2019 7:14 AM GMT (Updated: 13 July 2019 7:14 AM GMT)

ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி. அவரை இன்னும் நம்புகிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டோனி. உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்விக்கு டோனியின் ரன் அவுட்டும் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் ஓய்வு பெறக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் விவாதம்  ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், டோனியை புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் டோனி. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், அவர் ரன் அவுட் ஆகவில்லை என்றால், அந்த போட்டியை வென்று கொடுத்திருப்பார். நீங்கள் அதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிறந்த வீரராக இல்லை என்றால், அவர் என்ன செய்கிறார் என்று நீங்கள் சந்தேகப்பட மாட்டீர்கள்.

மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். நான் இன்னும் அவரை நம்புகிறேன். இந்தியாவுக்காக பல போட்டிகளை அவர் வென்று கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களாக ஒரே மாதிரியாகத்தான் அவர் விளையாடுகிறார். டோனி இல்லையென்றால், போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் அனைத்துப் போட்டிகளையும் வென்று கொண்டே இருக்க முடியாது. ஒரு நாள் போட்டிகளில் சேசிங்கில் மற்றவர்களை விட, அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார்.

அந்த அரையிறுதி போட்டியில் விராட் கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை. நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும்தான் அணியின் வெற்றிக்கு காரணம் என கூறினார்.

Next Story