உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்சை சேர்க்காதது தென்ஆப்பிரிக்க அணிக்கு தான் இழப்பு யுவராஜ்சிங் கருத்து


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்சை சேர்க்காதது தென்ஆப்பிரிக்க அணிக்கு தான் இழப்பு யுவராஜ்சிங் கருத்து
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 8:15 PM GMT)

கடந்த ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென்ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டிவில்லியர்ஸ்.

புதுடெல்லி, 

கடந்த ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென்ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டிவில்லியர்ஸ் உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு அணியில் இணைந்து விளையாட தயார் என்று கேப்டன் டுபிளிஸ்சிஸ், பயிற்சியாளர் கிப்சன் ஆகியோரிடம் தெரிவித்ததாகவும், அதனை தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகம் நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாயின. இதைத்தொடர்ந்து டிவில்லியர்சை பலரும் விமர்சித்தனர். பணம் கொழிக்கும் ஐ.பி.எல். போன்ற போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் ஓய்வு முடிவை எடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு நேற்று முன்தினம் டிவில்லியர்ஸ் விளக்கம் அளித்தார். அதில், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே ஓய்வு முடிவை எடுத்ததாகவும், நான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாக கூறுவது தவறானதாகும். உலக கோப்பை அணியில் எனக்கு இடம் வேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்தவில்லை. அணிக்கு தேவையென்றால் விளையாட தயார் என்று தான் தெரிவித்தேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங், கேப்டன் விராட்கோலி ஆகியோர் டிவில்லியர்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து யுவராஜ்சிங் தனது இன்ட்ஸ்ராகிராம் பதிவில், ‘என்னுடைய நெருங்கிய நண்பரே, கிரிக்கெட் ஜாம்பவானே. சர்வதேச கிரிக்கெட்டில் நான் சந்தித்த வீரர்களில் பழகுவதற்கு நீங்கள் மிகவும் அருமையான மனிதர். உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் நீங்கள் இடம்பெறாததால் கோப்பையை வெல்ல துளிகூட வாய்ப்பு இல்லாமல் தான் இருந்தது. உங்களை சேர்க்காதது தென்ஆப்பிரிக்க அணிக்கு தான் இழப்பு. உங்களுக்கு அல்ல. பெரிய வீரர் என்பதால் அதிக விமர்சனத்தை சந்தித்து இருக்கிறீர்கள். நீங்கள் ஜென்டில்மேன் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். நாங்கள் உங்களை மதிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

விராட்கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘எனது சகோதரரே நீங்கள் மிகுந்த நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட வீரர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு இது நடந்து விட்டது. நாங்கள் உங்களை நம்புகிறோம். உங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்போம். உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது வேதனைக்குரியது. நானும், எனது குடும்பமும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story