வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைப்பு


வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 18 July 2019 11:46 PM GMT (Updated: 18 July 2019 11:46 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று(19-ந் தேதி) அறிவிக்கப்படும் என்றும், இதையொட்டி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் மும்பையில் இன்று சந்தித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மூத்த விக்கெட் கீப்பர் டோனியின் எதிர்காலம் என்னவாகும், தொடரில் கேப்டன் விராட் கோலி முழுமையாக ஆடுவாரா? உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்குமா? என்று பல்வேறு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் திடீரென வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு செய்யப்படுகிறது.

காயத்தில் சிக்கிய சில வீரர்களின் உடல்தகுதி அறிக்கை நாளை மாலை தான் கிடைக்க இருக்கிறது. அத்துடன் தேர்வு விதிமுறைகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களும் அணித் தேர்வு ஒத்திவைப்புக்கு காரணமாகும்.

வழக்கமாக அணித் தேர்வு கூட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முன்னின்று நடத்துவார். ஆனால் இனிமேல் அணித்தேர்வு விஷயமாக நடக்கும் கூட்டங்களை தேர்வு குழு தலைவர் தான் நடத்த வேண்டும். இதில் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரோ, தலைமை செயல் அதிகாரியோ கலந்து கொள்ளக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியலுக்கு கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை. ஏதாவது வீரர்களை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் செயலாளரிடம் அனுமதி கோர வேண்டிய அவசியம் இல்லை.

லோதா கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story