காஞ்சி வீரன்சுக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை அணி தோல்வி


காஞ்சி வீரன்சுக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை அணி தோல்வி
x
தினத்தந்தி 29 July 2019 12:02 AM GMT (Updated: 29 July 2019 12:02 AM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்சுக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை அணி தோல்வியை தழுவியது.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் நேற்று மாலை நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த மதுரை அணிக்கு தொடக்கம் சொதப்பியது. நட்சத்திர வீரர் அருண் கார்த்திக் ஒரு ரன்னிலும், சரத்ராஜ் 17 ரன்னிலும் வெளியேறினர்.

இதன் பிறகு ஷிஜித் சந்திரனும், ஜே.கவுசிக்கும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 84 ரன்களுடன் (12.2 ஓவர்) இருந்ததை பார்த்த போது அந்த அணி 150 ரன்களை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. சந்திரன் (39 ரன்), ஜே.கவுசிக் (22 ரன்) இருவரையும் மிதவேகப் பந்து வீச்சாளர் ஆர்.சிலம்பரசன் காலி செய்தார். தொடர்ந்து சிலம்பரசனின் பந்து வீச்சில் மிரண்டு போன மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆர்.சிலம்பரசன் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து களம் கண்ட காஞ்சி வீரன்ஸ் அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் விஷால் வைத்யா (6 ரன்), சித்தார்த் (14 ரன்) நிலைக்கவில்லை. 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபா அபராஜித்தும், விக்கெட் கீப்பர் லோகேஷ்வரும் கைகோர்த்து அணியை நிமிரச் செய்ததுடன் வெற்றிப்பாதைக்கும் அடித்தளமிட்டனர். அபராஜித் 44 ரன்னில் கேட்ச் ஆனார். பின்னர் வந்த ஆர்.சதீஷ் 19-வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரியோடு இலக்கை எட்ட வைத்தார்.

காஞ்சி வீரன்ஸ் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ்வர் 51 ரன்களுடனும் (42 பந்து, 6 பவுண்டரி), ஆர்.சதீஷ் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த சீசனில் நெல்லை மைதானத்தில் 2-வது பேட் செய்த அணி பெற்ற முதல் வெற்றி இது தான். 3-வது லீக்கில் ஆடிய காஞ்சி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். மதுரை அணி சந்தித்த 2-வது தோல்வியாகும்.


Next Story