இந்திய அணியில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மையானது : விராட் கோலிக்கு விசுவாசம் காட்டிய இரு வீரர்கள்


இந்திய அணியில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மையானது :  விராட் கோலிக்கு விசுவாசம் காட்டிய இரு வீரர்கள்
x
தினத்தந்தி 29 July 2019 12:24 PM GMT (Updated: 29 July 2019 12:24 PM GMT)

அரசியலை விட மோசமாக சென்று கொண்டு இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்திய அணி வீரர்கள் இருவர் ரோகித் சர்மாவை பழி வாங்கி கேப்டன் கோலிக்கு தங்களது விசுவாசத்தை காட்டி உள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்ற பின், அணிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோகித்தின் ஆலோசனையை விராட் கோலி ஏற்கவில்லை என்றும் இதனால்தான் பிரச்சினை என்றும் தெரிகிறது. 

ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்களும் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் தனித்தனியாக செயல்படுவதாகவும்  கூறப்பட்டது. விராட்-ரோகித் விரிசல் இப்போது அதிகரித்து இருப்பதாகவும்  இருவருக்குமான பனிப்போர் முற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அவரை பின் தொடர்வதில் இருந்து ரோகித் வெளியேறி இருக்கிறார். விராட் கோலியின் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து முன்பே விலகி விட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இவர்கள் பிரச்சினை முற்றியுள்ளதாகத் தெரிகிறது. 

இவர்களது இந்த மோதல் அரசியலை விட கீழ்த்தரமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி - துணை கேப்டன் ரோஹித் சர்மா மோதல், இந்திய அணியில் கோஷ்டி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

இந்திய வீரர்கள் ராகுல் மற்றும் சாஹல், அதே அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித் அன்பாலோ செய்த பின் புதிதாக பாலோ செய்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகளும் வேகமாக பரவி வருகிறது.

ரோகித் சர்மாவை பழி வாங்குவதாக நினைத்து "சின்னப் புள்ளத்தனமாக" அவர்கள் இருவரும் இப்படி செய்ததாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதன் மூலம் ராகுல், சாஹல் இருவரும் விராட் கோலி கோஷ்டி என்பதை உறுதிப்படுத்தியதோடு, ரோகித்தை பழி வாங்கி தங்கள் விசுவாசத்தை காட்டி உள்ளனர். 

ராகுல் கடந்த ஆண்டுகளில் மோசமாக ஆடினாலும், அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வந்தது. அதே போல சாஹல், கோலி கேப்டனாக இருக்கும் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்தவர். அதோடு தற்போது, ரோஹித் செயலுக்கு எதிராக இவர்கள் செய்துள்ள காரியத்தால் இவர்கள் கோலி கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் என தெரிய வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

Next Story