உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரால் விறுவிறுப்பு அதிகரிக்கும் - விராட்கோலி கருத்து


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரால் விறுவிறுப்பு அதிகரிக்கும் - விராட்கோலி கருத்து
x
தினத்தந்தி 29 July 2019 11:45 PM GMT (Updated: 29 July 2019 11:45 PM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

துபாய்,

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுநாள் (1-ந் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டி தொடரில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரும் ஆரம்பமாகி விடுகிறது. இந்த தொடர் முதல் ஒவ்வொரு நாடுகளின் டெஸ்ட் போட்டி தொடரின் முடிவுகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி புள்ளிகளாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளாகும். ஒவ்வொரு அணியும் 6 அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடரில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விளையாட வேண்டும். உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இந்த டெஸ்ட் போட்டி தொடர் இருக்கும். ஒவ்வொரு தொடரின் முடிவுக்கு தகுந்தபடி அணிகளுக்கு புள்ளிகள் கிடைக்கும். லீக் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டில் ஜூன் மாதம் நடக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் அங்கமாக இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீஸ் சென்று அந்த அணியுடன் 2 டெஸ்ட் போட்டியிலும், அக்டோபர் மாதத்தில் உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டியிலும், நவம்பர் மாதத்தில் உள்ளூரில் வங்காளதேசத்துடன் 2 டெஸ்ட் போட்டியிலும், அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்து சென்று அந்த நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டியிலும், 2020-ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று அந்த நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் போட்டியிலும், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் உள்ளூரில் இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. ஒரு போட்டி தொடரில் ஒரு அணி அதிகபட்சமாக 120 புள்ளிகள் பெற முடியும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரை எதிர்கொள்ள ஆர்வமாக காத்து இருக்கிறோம். இந்த போட்டி தொடர் டெஸ்ட் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும். பாரம்பரியமும் மிகுந்த சவாலும் மிக்க டெஸ்ட் போட்டியில் முதன்மையான இடத்தை பிடிப்பது எப்பொழுதும் அதிக திருப்தியை அளிக்கும். சமீபகாலங்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நமது அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்’ என்றார்.


Next Story