புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி
x
தினத்தந்தி 29 July 2019 11:49 PM GMT (Updated: 29 July 2019 11:49 PM GMT)

புரோ கபடி லீக் போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மும்பை,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரட்சை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் தமிழ் தலைவாஸ் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பாட்னா பைரட்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு சரிவில் இருந்து மீண்டு வந்தனர். இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்ததால் ஆட்டம் பல முறை சமநிலையில் இருந்தன. முதல் பாதியில் இரு அணிகளும் 11-11 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன.

கடைசி கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டின. தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரர்களான ராகுல் சவுத்ரி, அஜய் தாகூர் ஆகியோர் முக்கியமான கட்டத்தில் ஜொலிக்க தவறினார்கள். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 23-24 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.

3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முந்தைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி இதேபோல் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தபாங் டெல்லியிடம் தோல்வி கண்டு இருந்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா பைரட்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் அணி 43-23 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை சாய்த்து 2-வது வெற்றியை தனதாக்கியது. புனேரி பால்டன் அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியை சந்தித்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), யூ மும்பா-உ.பி.யோத்தா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story