பயிற்சியாளர் தேர்வில் கோலியின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? கமிட்டி உறுப்பினர் பேட்டி


பயிற்சியாளர் தேர்வில் கோலியின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? கமிட்டி உறுப்பினர் பேட்டி
x
தினத்தந்தி 31 July 2019 10:00 PM GMT (Updated: 31 July 2019 7:41 PM GMT)

பயிற்சியாளர் தேர்வில் விராட் கோலியின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு கமிட்டி உறுப்பினர் கெய்க்வாட் பதில் அளித்தார்.

மும்பை,

பயிற்சியாளர் தேர்வில் விராட் கோலியின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு கமிட்டி உறுப்பினர் கெய்க்வாட் பதில் அளித்தார்.

பயிற்சியாளர் பதவி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் ஒப்பந்தம் உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைந்தது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக அவரது பதவி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், இந்திய முன்னாள் வீரர்கள் ராபின்சிங், லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு சலுகையாக ரவிசாஸ்திரிக்கு நேரடியாக பயிற்சியாளர் போட்டியில் நிற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் புறப்படுவதற்கு முன்பாக பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘ரவிசாஸ்திரியுடன் எங்களுக்கு நல்ல புரிந்துணர்வும், நட்புறவும் இருக்கிறது. அவர் பயிற்சியாளராக நீடித்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவோம்’ என்று குறிப்பிட்டார்.

கெய்க்வாட் சொல்வது என்ன?

இந்த நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கபில்தேவ் தலைமையிலான 3 பேர் கமிட்டியில் இடம் வகிக்கும் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட்டிடம், கோலியின் கருத்து பயிற்சியாளர் தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று கேட்ட போது, ‘கேப்டன் எதுவும் சொல்லலாம். அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு கமிட்டி. அவரது கருத்தை கவனிக்க வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியமே தவிர, நாங்கள் அல்ல. கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு எந்த மாதிரி வழிகாட்டுதலை வழங்குகிறதோ அதன் அடிப்படையில் செயல்படுவோம். பெண்கள் அணிக்கான பயிற்சியாளரை தேர்வு செய்த போது, பெண்கள் அணியின் கேப்டன் உள்ளிட்ட யாரையும் நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. சுயமாகவே முடிவு செய்தோம்.

இதே போல் நாங்கள் திறந்த மனதுடன் செல்ல வேண்டும். பயிற்சியாளர் பதவிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டினரும் விண்ணப்பித்து உள்ளனர். அவற்றை மதிப்பீடு செய்து நேர்காணல் நடத்தப்பட வேண்டும். பயிற்சியாளர் பொறுப்பில் சாதிப்பதற்கு வீரர்களை நிர்வகிக்கும் திறன், திட்டமிடல், தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவை மிகவும் முக்கியம். இந்த தகுதிகளை பயிற்சியாளர் தேர்வில் கவனிப்போம்’ என்றார்.


Next Story