சண்டையா... சமாதானமா... ரோகித் இல்லாத புகைப்படத்தை மீண்டும் பதிவிட்ட விராட் கோலி - ரசிகர்கள் குழப்பம்


சண்டையா... சமாதானமா... ரோகித் இல்லாத புகைப்படத்தை மீண்டும் பதிவிட்ட விராட் கோலி -  ரசிகர்கள் குழப்பம்
x
தினத்தந்தி 2 Aug 2019 9:03 AM GMT (Updated: 2 Aug 2019 9:03 AM GMT)

ரோகித் இல்லாத புகைப்படத்தை பதிவிட்ட விராட் கோலியால் சண்டையா... சமாதானமா... என ரசிகர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

புளோரிடா,

ரோகித்துடன் சண்டை என்பது நிஜம் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இல்லாத மற்றொரு போட்டோவை ரிலீஸ் செய்திருக்கிறார் விராட் கோலி.

உலக கோப்பைக்கு பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் இடையே பிரச்சினை என்று செய்திகள் வெளியானது. இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விராட் கோலி, நீங்கள் சொல்வதை கேள்விப்பட்டேன். ஓர் அணியின் வெற்றிக்கு ஓய்வு அறையில் நிலவும் சூழல் முக்கியமானது. அந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால், நம்மால் நன்றாக விளையாடியிருக்க முடியாது.

ஒரு நபரை எனக்கு பிடிக்கவில்லை என்றால், நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதிலும், என் முகத்திலும் அதை நீங்கள் பார்க்கலாம். அது எளிமையான விஷயம். நான் எப்பொழுதும் ரோகித் சர்மாவை பாராட்டி வந்துள்ளேன். ஏனெனில் அவர் சிறந்தவர் என்பதை நம்புகிறேன். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒருவிதமான குழப்பம்தான். இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மியாமிக்கு  புறப்படும் முன், இந்திய வீரர்கள் சிலருடன் விராட் கோலி செல்பி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த செல்பியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இதனால்,உங்களுக்குள் பிரச்சினை இல்லை என்றால் ரோகித்தை ஏன் புகைப்படத்தில் விட்டுவிட்டீர்கள்? என்று கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர் ரசிகர்கள். ரோகித் எங்கே என்றும், அவரை விட்டுவிட்டதால், பிரச்சினை இருப்பது உண்மைதான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.


சமீபத்தில் டுவிட்டர் பதிவிட்ட ரோகித் சர்மா ”நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை; நாட்டுக்காக விளையாடுகிறேன்”என கூறி இருந்தார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் பதிவிட்ட போட்டோவில், புவனேஸ்வர் குமார், தவான், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணி நேரத்தில் வைரலாகியது. அதை பார்த்த ரசிகர்கள், கேப்டன் கோலி அப்போது எங்கு போனார்? எங்கிருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார், அதில் ரோகித் சர்மா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதனை ஸ்குவாட் (அதாவது விளையாடும் அணி) என்று குறிப்பிட்டு உள்ளார். எனவே மீண்டும் கோலி, ரோகித் பிளவு குறித்து ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

Next Story