ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸ் சதம் அடித்தார்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸ் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 2 Aug 2019 10:30 PM GMT (Updated: 2 Aug 2019 9:31 PM GMT)

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது.

பர்மிங்காம், 

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித் (144 ரன்) சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் 10 ரன்னில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் கைகோர்த்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். ஜோ ரூட் 57 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ டென்லி 18 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 5 ரன்னிலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சில் சிக்கினர். இதற்கு மத்தியில் நங்கூரம் போல் நிலைகொண்டு ஆடிய இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் தனது ‘கன்னி’ சதத்தை பூர்த்தி செய்தார்.

2-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Next Story