டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடியை வெளியேற்றியது கோவை கிங்ஸ்


டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடியை வெளியேற்றியது கோவை கிங்ஸ்
x
தினத்தந்தி 4 Aug 2019 11:00 PM GMT (Updated: 4 Aug 2019 7:54 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, காரைக்குடி காளையை வீழ்த்தியது.

சென்னை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, காரைக்குடி காளையை வீழ்த்தியது.

சென்னையில் கிரிக்கெட்

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 22-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை- கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் சென்னையில் நடக்கும் முதல் ஆட்டம் இதுவாகும்.

மழை காரணமாக 15 நிமிடம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த கோவை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கோவை அணியின் இன்னிங்சை ஷாருக்கானும், கேப்டன் அபினவ் முகுந்தும் தொடங்கினர். அபாரமாக ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் (10.5 ஓவர்) சேர்த்தனர். முகுந்த் (32 ரன்) ரன்-அவுட் ஆனார்.

இதன் பிறகு ஷாருக்கான் அதிரடி காட்டினாலும் மறுமுனையில் எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட குறைந்து போனது. ஷாருக்கான் 59 ரன்களில் (43 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். குறுகிய நேரமே நின்றாலும் சிக்சர் மழை பொழியும் அந்தோணி தாஸ் (9 ரன், 18 பந்து) இந்த முறை ஏமாற்றம் அளித்தார். 20 ஓவர்களில் கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது.

கோவை வெற்றி

பின்னர் 155 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய காரைக்குடி அணி, கோவை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய காரைக்குடி அணியால் 7 விக்கெட்டுக்கு 139 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கோவை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்குடி அணியில் அதிகபட்சமாக ஷாஜகான் 41 ரன்களும், கேப்டன் அனிருதா 24 ரன்களும் எடுத்தனர். கோவை தரப்பில் அந்தோணிதாஸ், ரங்கராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 6-வது லீக்கில் ஆடிய கோவை அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

அதே சமயம் 5-வது தோல்வியை தழுவிய காரைக்குடி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Next Story