டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் 177 ரன்கள் குவிப்பு ; முரளி விஜய் சதம்


டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் 177 ரன்கள் குவிப்பு ; முரளி விஜய் சதம்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:00 PM GMT (Updated: 6 Aug 2019 4:00 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான 24-லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதனையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கே.முகுந்த் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். இதில் கே.முகுந்த் 6 ரன்களிலும், அடுத்து வந்த ஆதித்யா பாரூக் ரன் எதுவும் எடுக்காமலும் கேட்ச் ஆகி வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த முரளி விஜய் மற்றும் ஆதித்யா கணேஷ் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். 

தொடர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்த  முரளி விஜய் சதம் அடித்து அசத்தினார். இவர் 57 பந்துகளில் 101 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த ஆதித்யா கணேஷ் 56 ரன்களில் கேட்ச் ஆனார்.

இறுதியில் திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் மணிபாரதி 6 ரன்களுடனும், சத்ய நாராயணன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி களமிறங்க உள்ளது.

Next Story