பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட முடிவு


பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட முடிவு
x
தினத்தந்தி 7 Aug 2019 11:55 PM GMT (Updated: 7 Aug 2019 11:55 PM GMT)

பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

லாகூர்,

சமீபத்தில் முடிவடைந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. தோல்வி குறித்து அலசி ஆராய்ந்து தங்களது அறிக்கையை சமர்ப்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் கமிட்டி, ‘பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புதிய தலைமையும், புதிய அணுகுமுறைகளும் வர வேண்டிய நேரம் இது தான். ’ என்று பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதல் நடவடிக்கையாக தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை (தென்ஆப்பிரிக்கா) கழற்றி விட முடிவு செய்துள்ளது.

2016-ம் ஆண்டு மே மாதம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மிக்கி ஆர்தரின் பதவி காலம் அடுத்த வாரத்துடன் முடிகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் கூறி வந்த நிலையில் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதே போல் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் (ஜிம்பாப்வே), பந்து வீச்சு பயிற்சியாளர் அசார் மக்மூத் (பாகிஸ்தான்), உடல்தகுதி இயக்குனர் கிரான்ட் லுடென் ஆகியோரின் ஒப்பந்தத்தையும் நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.

கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கை குறித்து மிக்கி ஆர்தர் கூறுகையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட்டை தூக்கி நிறுத்த எனது முழு முயற்சியை வெளிப்படுத்தினேன். பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவது எனக்கு ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது’ என்றார்.


Next Story