இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்து


இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்து
x
தினத்தந்தி 10 Aug 2019 12:15 AM GMT (Updated: 10 Aug 2019 12:15 AM GMT)

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

கயானா,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள புரோவிடென்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க இருந்தது. போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டம் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. மழை பாதிப்பு காரணமாக போட்டி 43 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். வெஸ்ட்இண்டீஸ் அணி 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. 1 மணி நேரத்துக்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 31 பந்துகளில் 4 ரன் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து ஷாய் ஹோப் வந்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இவின் லீவிஸ் 40 ரன்னுடனும் (36 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஷாய் ஹோப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து மழை கொட்டியதால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து போட்டி பாதியில் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை நடக்கிறது.

போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘கிரிக்கெட்டில் அடிக்கடி மழை குறுக்கிடுவதும், மீண்டும் ஆட்டத்தை தொடர்வதும் சிறந்ததாக இருக்காது. ஒன்று மழையால் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். அல்லது போட்டி முழுமையாக நடக்க வேண்டும். அடிக்கடி மழையால் தடைப்பட்டு களம் இறங்கும் போது, கவனமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். கவனமாக செயல்படாவிட்டால் வீரர்கள் காயம் அடைய நேரிடும். சில ஆடுகளங்கள் உண்மையிலேயே உங்களை சோதிக்கும்’ என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூறுகையில், ‘மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. அடுத்து வரும் போட்டிகள் மழையால் பாதிக்கப்படாது என நம்புகிறேன்’ என்றார்.


Next Story