இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல் இ-மெயிலால் பரபரப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு


இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல்  அச்சுறுத்தல் இ-மெயிலால் பரபரப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 6:59 AM GMT (Updated: 19 Aug 2019 6:59 AM GMT)

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் - இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி ஆண்டிகுவாவில் தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இந்த மிரட்டல் இ-மெயில் தகவலை அங்கிருந்து ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) பகிரப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. அந்த மின்னஞ்சலில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களை கண்காணித்து வருவதாகவும், அவர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மின்னஞ்சல் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அது புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யப் போவதில்லை என்று கூறியுள்ள பிசிசிஐ இதுதொடர்பாக, ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது இந்திய அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் மேலும் அதிகப்படுத்தப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story