இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைப்பு


இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 8:45 PM GMT)

சூதாட்ட வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடை நீக்கப்பட்டு அது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

சூதாட்ட வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடை நீக்கப்பட்டு அது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது ‘ஸ்பாட்பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் சிக்கினார். அந்த ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட ஓவரில் 14 ரன்களை விட்டுக்கொடுப்பதற்காக சூதாட்ட தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் சேர்த்து சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். ஆனால், தான் ஒரு அப்பாவி என்று ஸ்ரீசாந்த் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இது தொடர்பான வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி பாட்டியாலா நீதிமன்றம் அவர்களை கடந்த 2015-ம் ஆண்டு விடுவித்தது. இருப்பினும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஆயுட்கால தடை விதித்தது.

7 ஆண்டு தடை

இந்த தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு ஸ்ரீசாந்துக்கு விதித்த ஆயுட்கால தடையை ரத்து செய்தது. ‘ஸ்பாட்பிக்சிங்’ விவகாரத்தில் அதற்குரிய தண்டனையை 3 மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் ஸ்ரீசாந்த் விவகாரத்தில் தீர்ப்பளித்துள்ளார். அதில், ‘ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அது சார்ந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 7 ஆண்டு தடை விதிக்கிறோம். இந்த தடை முன்தேதியிட்டு அதாவது 13-9-2013-ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது. இதன்படி அவரது தடை காலம் 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடையும். அதன் பிறகு எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடலாம். இப்போது அவருக்கு 36 வயது ஆகிறது. ஒரு வேகப்பந்து வீச்சாளராக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்து விட்டது’ என்று கூறியுள்ளார்.

100 விக்கெட் வீழ்த்த ஆசை

2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடியவரான ஸ்ரீசாந்த் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்காக பிரார்த்தனை செய்த எனது நலம்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது எனக்கு 36 வயது ஆகிறது. அடுத்த ஆண்டில் தடை முடியும் போது 37 வயதாகும். நான் 27 டெஸ்டில் விளையாடி 87 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையை 100 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். என்னால் இந்த டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டது உண்டு’ என்றார்.

Next Story