இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் - சையத் கிர்மானி வலியுறுத்தல்


இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் - சையத் கிர்மானி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Aug 2019 11:28 PM GMT (Updated: 27 Aug 2019 11:28 PM GMT)

2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி வலியுறுத்தி உள்ளார்.


* பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) 2020-ம் ஆண்டு இந்தியாவில் 4 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இந்த போட்டி நடப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தின் வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்த போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முழு திருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து முதல் இடமாக புவனேசுவரத்தை தேர்வு செய்து தற்காலிகமாக ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் கடைசியில் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்த பிறகு, போட்டி அமைப்பாளர்கள் இடத்தை இறுதி செய்வார்கள்.

* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் என்ற இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி வலியுறுத்தியுள்ளார். ‘ஓய்வு விஷயத்தில் டோனியை தனியாக விட்டு விடுங்கள். உரிய நேரம் வரும் போது அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார். அவரது ஓய்வு குறித்து பேசுவதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். டோனி இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்’ என்றும் கிர்மானி கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் விண்ணப்பித்துள்ளார். மிஸ்பா பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையின் எப்.சி. அணி மால்டா தீவை சேர்ந்த முன்கள வீரர் ஆந்த்ரே ஸ்கீம்ரியை ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து 33 வயதான ஆந்த்ரே ஸ்கீம்ரி கூறுகையில் ‘ஐ.எஸ்.எல். மற்றும் சென்னையின் எப்.சி.அணியில் பங்கேற்கும் முதலாவது மால்டா வீரர் என்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். சென்னை அணி பட்டம் வெல்லும் இலக்கை எட்ட எனது முழு பங்களிப்பையும் அளிப்பேன்’ என்றார்.

* எஸ்.ஆர்.எம். நிறுவனர் கோப்பைக்கான மாநில பால்பேட்மிண்டன் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி (சென்னை) அணி 35-31, 29-35, 35-30 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

* தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு வந்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாட தயாராக இருப்பதாக இந்திய மூத்த வீராங்கனை 36 வயதான மிதாலிராஜ் கூறியுள்ளார். ஆனால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருத்தில் கொண்டு இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ள தேர்வு குழு, மிதாலியை நீக்கலாம் என்று தெரிகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வருகிற 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.


Next Story