அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய சாதனையாளர்: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் ஓய்வு


அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய சாதனையாளர்: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் ஓய்வு
x
தினத்தந்தி 28 Aug 2019 11:30 PM GMT (Updated: 28 Aug 2019 11:30 PM GMT)

அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய சாதனையாளரான, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் ஓய்வு அறிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த 34 வயதான அஜந்தா மென்டிஸ் எல்லா வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்றிரவு அறிவித்தார். 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்த மென்டிஸ், ‘கேரம்’ வகை சுழல் யுக்தி மூலம் பேட்ஸ்மேன்களை விழிபிதுங்க வைத்தார். 2008-ம் ஆண்டு கராச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் மென்டிஸ் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர் தான். இந்த மைல்கல்லை அவர் 19 ஆட்டங்களில் எட்டிப்பிடித்தார்.

கடைசியாக 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அணிக்காக ஆடினார். 19 டெஸ்டுகளில் 70 விக்கெட்டுகளும், 87 ஒரு நாள் போட்டிகளில் 152 விக்கெட்டுகளும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 39 ஆட்டங்களில் 66 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். மூன்று வடிவிலான போட்டிகளிலும் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலர் என்ற சிறப்பும் மென்டிசுக்கு உண்டு. அடிக்கடி காயமடைந்ததால் அது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தொய்வை ஏற்படுத்தியது.


Next Story