ஓய்வு முடிவை திரும்ப பெற்றார், அம்பத்தி ராயுடு


ஓய்வு முடிவை திரும்ப பெற்றார், அம்பத்தி ராயுடு
x
தினத்தந்தி 30 Aug 2019 7:23 AM GMT (Updated: 30 Aug 2019 11:35 PM GMT)

நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று அம்பத்தி ராயுடு ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐதராபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. மாற்று வீரர் பட்டியலில் இருந்த அவருக்கு ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகிய போதிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த 33 வயதான அம்பத்தி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஜூலை 3-ந் தேதி அதிரடியாக அறிவித்தார். அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவில் இருந்து பின் வாங்கி இருக்கிறார். இது தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அவர் அனுப்பி இருக்கும் இ-மெயிலில், ‘உணர்ச்சிவசப்பட்டு ஓய்வு முடிவை எடுத்து விட்டேன். நான் ஓய்வில் இருந்து வெளியே வந்து அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். என்னுடைய கடினமான தருணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், வி.வி.எஸ்.லட்சுமண், நோயல் டேவிட் ஆகியோர் எனக்கு ஆதரவு அளித்ததுடன், என்னை ஊக்கப்படுத்தி இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு இருக்கிறது என்பதை உணரவைத்தார்கள். மிகச்சிறந்த ஐதராபாத் அணியில் நான் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பை இந்த சீசனில் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story