சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் விஹாரி தந்தையை நினைத்து உருக்கம்


சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் விஹாரி தந்தையை நினைத்து உருக்கம்
x
தினத்தந்தி 1 Sep 2019 2:00 PM GMT (Updated: 1 Sep 2019 2:00 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விஹாரி தனது முதல் டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.

கிங்ஸ்டன்,

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 416 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விஹாரி சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். விஹாரி 111 (225) குவித்த நிலையில் ஹோல்டர் பந்தில் கேட்ச் ஆனார். 

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்து  தடுமாறி வருகிறது.  இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா ஹாட்ரிக் விக்கெட் உட்பட  6 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதனிடையே இரண்டாம் நாள் ஆட்டத்துக்கு பின், தனது முதல் சதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஹாரி, 

”நான் 12 வயது இருக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். அந்த சமயத்தில்  நான் எப்போது எனது முதல் சர்வதேச சதத்தை அடிக்கிறேனோ அதை எனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தீர்மானித்தேன். அதன்படி இப்போது அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.

மேலும்  எனக்கு இன்று ஒரு நெகிழ்ச்சியான நாள். எனது தந்தை எங்கிருந்தாலும், என்னை நினைத்து இப்போது பெருமையடைவார் என்று நம்புகிறேன். தந்தைக்கு கொடுக்க நினைத்ததை சாதித்துவிட்டேன் என்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் சதம் அடிப்பதற்கு உறுதுணையாக  ஜோடி சேர்ந்து என்னுடன் விளையாடிய இஷாந்த் சர்மாவிற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Next Story