கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கோரிய தினேஷ் கார்த்திக்


கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கோரிய தினேஷ் கார்த்திக்
x
தினத்தந்தி 8 Sep 2019 2:58 PM GMT (Updated: 8 Sep 2019 2:58 PM GMT)

ஒப்பந்த விதிமுறையை மீறியதாக கிரிக்கெட் வாரியம் அனுப்பிய நோட்டீசுக்கு தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கோரி பதில் அளித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த  தினேஷ் கார்த்திக்  வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது அவர் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் இருந்துள்ளார். கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறாமல் அவர் அங்கு சென்றதால் ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உண்மை தான். தினேஷ் கார்த்திக் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் ஓய்வறையில் இருக்கும் புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களது மத்திய ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என கூறியிருந்தார். 

இந்நிலையில், கிரிக்கெட் வாரியம் நோட்டீசுக்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக்,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் தான், டிரின்பாகோ அணிக்கும் பயிற்சியாளர். எனவே அவர் அழைத்ததால் தான் நான் அங்கு சென்றேன்.

நான், அங்கு நடந்த எந்தப்போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடந்த 4-ம் தேதி நடந்த டிரின்பாகோ அணியின் முதல் போட்டியை ஓய்வறையில் இருந்து பார்க்கலாம் என்று பிரெண்டன் மெக்கலம் அழைத்ததால் அங்கு சென்றேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் அங்கு சென்றது தவறுதான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Next Story