இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 9 Sep 2019 12:09 AM GMT (Updated: 9 Sep 2019 12:09 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன. அடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் (0), கேப்டன் ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்து திண்டாடியது. 4-வது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘டிரா’ செய்யும் நோக்குடன் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஜாசன் ராய் (31 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் காலி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (53 ரன்), விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (25 ரன்) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.

6 விக்கெட்டுக்கு 136 ரன்களுடன் பரித்தவித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ் பட்லரும், கிரேக் ஓவர்டானும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர். ஆனால் தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (34 ரன், 111 பந்து, 4 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் (1 ரன்) நிலைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஓவர்டானும், ஜாக் லீச்சும் 14 ஓவர்கள் வரை ஈடுகொடுத்து விளையாடியதால், ஆஸ்திரேலிய பவுலர்கள் கொஞ்சம் பதற்றமடைந்தனர். இந்த சூழலில் ஜாக் லீச் (12 ரன், 51 பந்து) நாதன் லயனின் சுழலில் அருகில் நின்ற மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் நீண்ட நேரம் போராடிய ஓவர்டானின் (21 ரன், 105 பந்து) சவாலுக்கு ஹேசில்வுட் எல்.பி.டபிள்யூ. ஆகும் வகையில் ‘செக்’ வைத்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கொண்டு 14 ஓவர்கள் சமாளித்து இருந்தால் இங்கிலாந்து போட்டியை ‘டிரா’ செய்திருக்கும்.

ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரட்டை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 12-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

இந்த வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.


Next Story