தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கம் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கம் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 10:45 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. 20 ஓவர் ஆட்டங்கள் முறையே வருகிற 15, 18, 22-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் புனேயிலும் (அக்.10-14), 3-வது டெஸ்ட் ராஞ்சியிலும் (அக்.19-23) நடைபெறுகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டு வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராகுலுக்கு இடமில்லை

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சோபிக்காத (4 இன்னிங்சில் 101 ரன்) தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கழற்றி விடப்பட்டுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போன்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு விட்டார். இதன் மூலம் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தொடக்க வீரராக ஆடுவது உறுதியாகி விட்டது.

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் சுப்மான் கில் முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த 20 வயதான சுப்மான் கில் ஏற்கனவே இரண்டு ஒரு நாள் போட்டியில் ஆடியிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடிய வீரர்களில் மாற்றம் ஏதும் இல்லை.

தொடக்க வீரராக ரோகித்

அணி பட்டியலை வெளியிட்ட பிறகு இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘நிச்சயமாக, ரோகித் சர்மாவை நாங்கள் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவே பார்க்கிறோம். டெஸ்ட் இன்னிங்சில் முன்வரிசையில் அவர் விளையாட வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். நாங்கள் மட்டுமல்ல, அவரும் தொடக்க ஆட்டக்காரராக களம் காண ஆர்வமாக இருக்கிறார்.

சுப்மான் கில்லை பொறுத்தவரை முதல்தர போட்டிகளில் தொடக்க வீரராகவும், மிடில் வரிசை பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடி உள்ளார். இதனால் இரண்டு வரிசைக்கும் அவரை மாற்று வீரராக வைத்துள்ளோம். லோகேஷ் ராகுல் அற்புதமான திறமை கொண்டவர். துரதிர்ஷ்டவசமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சீராக இல்லை’ என்றார்.

அணி விவரம்

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, அஜிங்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, சுப்மான் கில்.

டெஸ்ட் தொடருக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. பயிற்சி ஆட்டம் வருகிற 26-ந்தேதி விஜயநகரத்தில் தொடங்குகிறது. இந்த பயிற்சி ஆட்டத்திற்கான கிரிக்கெட் வாரிய லெவன் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால், கருண்நாயர், ஜலஜ்சக்சேனா, அபிமன்யூ ஈஸ்வரன், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Next Story