முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
x
தினத்தந்தி 13 Sep 2019 11:45 PM GMT (Updated: 13 Sep 2019 11:45 PM GMT)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது.

டாக்கா,

வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

டாக்காவில் நேற்று நடந்த முதலாவது லீக்கில் வங்காளதேச அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. மழையால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 5 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. ரையான் புர்ல் 57 ரன்களும் (32 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் மசகட்சா 34 ரன்களும் விளாசினர்.அடுத்து களம் கண்ட வங்காளதேச அணி 60 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடிய போதிலும் ஆபிப் ஹூசைன் (52 ரன்), மொசாடெக் ஹூசைன் (30 ரன், நாட்-அவுட்) இருவரும் இணைந்து அணியை காப்பாற்றினர். வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

Next Story