முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே
x
தினத்தந்தி 14 Sep 2019 10:54 PM GMT (Updated: 14 Sep 2019 10:54 PM GMT)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானிடம் ஜிம்பாப்வே அணி வீழ்ந்தது.

டாக்கா,

வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்றிரவு நடந்த 2-வது லீக்கில் ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது. நஜிபுல்லா ஜட்ரன் 69 ரன்களும் (30 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), முகமது நபி 38 ரன்களும் (18 பந்து, 4 சிக்சர்) விளாசினர். ஜட்ரன்-நபி ஜோடி தொடர்ச்சியாக 7 பந்துகளில் 7 சிக்சர் பறக்க விட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பின்னர் கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 169 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் தங்களது முந்தைய உலக சாதனையை ஆப்கானிஸ்தான் சமன் செய்துள்ளது. இந்த தொடரில் இன்று நடக்கும் 3-வது லீக்கில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

Next Story