இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்து


இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்து
x
தினத்தந்தி 15 Sep 2019 1:12 PM GMT (Updated: 15 Sep 2019 10:42 PM GMT)

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையே தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்தானது.

தர்மசாலா,

இந்தியாவுக்கு வந்துள்ள குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள ‘குளுகுளு’ பகுதியான தர்மசாலாவில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்க இருந்தது.

ஆனால் பிற்பகலில் இருந்தே அங்கு மழை கொட்டித் தீர்த்தது. ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்த போதிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இடைவிடாது மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாத நிலையில் இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏக்கத்துடன் கலைந்து சென்றனர்.

ரசிகர்களின் டிக்கெட்டுக்குரிய பணம் வேறொரு நாளில் திருப்பி அளிக்கப்படும். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் வருகிற 18-ந்தேதி நடைபெறும்.

இந்த தொடரில் இருந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வீரர்களை அடையாளம் காண இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதல் ஆட்டமே ரத்தானது இளம் வீரர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.

முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில், ‘அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஏறக்குறைய 30 ஆட்டங்களில் நாங்கள் விளையாட உள்ளோம். இளம் வீரர்கள் வெகு சீக்கிரமாகவே அதாவது 4 அல்லது 5 ஆட்டங்களிலேயே தங்களது திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்டங்களிலேயே வாய்ப்பு கிடைக்கும் என்ற மனநிலையுடன் வீரர்கள் வர வேண்டியது அவசியம். ஏனெனில் அணி நிர்வாகத்தின் நிலைப்பாடு இது தான். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வீரர்களுக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும்’ என்றார்.


Next Story