பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் - பிரியாணி சாப்பிட தடை; பயிற்சியாளர் அதிரடி


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் - பிரியாணி சாப்பிட தடை; பயிற்சியாளர் அதிரடி
x
தினத்தந்தி 17 Sep 2019 1:45 PM GMT (Updated: 17 Sep 2019 11:14 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியில் கட்டுக்கோப்புடன் இருக்க பிரியாணி, இனிப்பு, பர்கர் உள்ளிட்டவற்றை சாப்பிடக்கூடாது என்று அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் உத்தரவிட்டுள்ளார்.

லாகூர்,

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகள் எடுத்து 5-வது இடத்தை பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு பாகிஸ்தான் அணி வீரர்கள் ஓட்டலில் பர்கர், பீட்சா உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது. அத்துடன் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியினர் சோர்வுடன் செயல்பட்டது தெளிவாக தெரிந்தது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது போட்டியின் போது சில முறை கொட்டாவி விட்ட சம்பவம் கேலியாக பேசப்பட்டது. உலக கோப்பை போட்டியுடன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார். பின்னர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமனம் செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு புதிய பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய அணி வீரர்கள் மற்றும் உள்ளூர் முதல் தர போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு பழக்க முறையில் மாற்றம் கொண்டு வர அவர் பரிந்துரை செய்துள்ளார். அதாவது வீரர்கள் மத்தியில் புதிய உடல் தகுதி கலா சாரத்தை கொண்டு வரும் நடவடிக்கையில் அவர் இறங்கி உள்ளார்.

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வீரர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான பிரியாணி, எண்ணையில் பொறிக்கப்பட்ட இறைச்சி, பர்கர், பீட்சா, இனிப்பு ஆகியவற்றை சாப்பிட தடை விதித்துள்ளார். அதே சமயம் நெருப்பில் சுட்டு சாப்பிடும் அசைவ உணவுகள், பாஸ்தா மற்றும் நிறைய பழங்களை தங்கள் உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த உணவு பழக்க முறை உள்ளூர் முதல்தர போட்டி வீரர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு வீரரும் தங்கள் உடல் தகுதி மற்றும் உணவு திட்டம் குறித்து தினசரி குறிப்பு புத்தகத்தை பின்பற்ற வேண்டும். இதனை சரியாக பின்பற்றாத வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story