விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: சர்வீசஸ் அணியை பந்தாடியது தமிழகம்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: சர்வீசஸ் அணியை பந்தாடியது தமிழகம்
x
தினத்தந்தி 25 Sep 2019 11:47 PM GMT (Updated: 25 Sep 2019 11:47 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் 212 ரன்கள் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை தமிழக அணி வீழ்த்தியது.

ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 22 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை தோற்கடித்த தமிழக அணி நேற்று சர்வீசசை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த சர்வீசஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்டி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 95 ரன்களும் (91 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹரிநிஷாந்த் 73 ரன்களும் (71 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), முகமது 36 ரன்களும் (15 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய சர்வீசஸ் அணி, தமிழக வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.1 ஓவர்களில் 82 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தமிழக அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. வேகப்பந்து வீச்சாளர் கே.விக்னேஷ் 5 விக்கெட்டுகளும், முகமது 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

‘ஏ’ பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் மும்பை அணிக்குரிய 2-வது லீக் ஆட்டமும் (ஜார்கண்ட் அணிக்கு எதிரான) மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிக்கும் தலா 2 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதே போல் கேரளா-சத்தீஷ்கார், ஐதராபாத்-கோவா அணிகள் இடையிலான ஆட்டமும் மோசமான வானிலையால் ரத்தானது.


Next Story