பாகிஸ்தான்-இலங்கை முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து - போட்டி அட்டவணையில் மாற்றம்


பாகிஸ்தான்-இலங்கை முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து - போட்டி அட்டவணையில் மாற்றம்
x
தினத்தந்தி 27 Sep 2019 11:33 PM GMT (Updated: 27 Sep 2019 11:33 PM GMT)

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மேலும் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடக்க இருந்தது. இங்கு கடந்த சில நாட்களாக பருவ மழை கொட்டி வருகிறது. நேற்றும் மழை நீடித்து மைதானம் வெள்ளக்காடானதால் வேறு வழியின்றி முதலாவது ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கராச்சியில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்க இருந்த நிலையில் அதுவும் மழையால் பாழானதால் வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 2-வது ஆட்டம் 30-ந்தேதிக்கு (திங்கட்கிழமை) மாற்றப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் டி.வி. ஒளிபரப்பு நிறுவனத்துடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அந்த டிக்கெட்டை 2-வது ஆட்டத்திற்கோ அல்லது கடைசி போட்டியை பார்க்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது அதற்குரிய பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


Next Story