‘இந்திய அணிக்கு முதல் அடியை நாங்கள் கொடுக்க வேண்டும்’ - தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் ஆசை


‘இந்திய அணிக்கு முதல் அடியை நாங்கள் கொடுக்க வேண்டும்’ - தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் ஆசை
x
தினத்தந்தி 29 Sep 2019 11:49 PM GMT (Updated: 29 Sep 2019 11:49 PM GMT)

இந்திய அணிக்கு முதல் அடியை நாங்கள் கொடுக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

விசாகப்பட்டினம்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கணக்கீட்டில் வருவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி தென்ஆப்பிரிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமான காரியம். நாங்கள் அனைவரும் சவாலை சந்திக்க ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இந்த தொடரில் நிறைய வீரர்கள் இடையே கடும் போட்டி காணப்படும். பெரிய வீரர்கள் மீது தான் அனைவரது கவனமும் இருக்கும். எங்களது பணி என்ன வென்றால் இங்கு, பலம் வாய்ந்த இந்தியாவுக்கு முதல் அடியை (அதிர்ச்சி) நாங்கள் கொடுக்க வேண்டும். அதற்கு மூத்த வீரர்கள் பொறுப்புணர்வுடன் விளையாட வேண்டும்.

ஒரு அணியாக நாங்கள் மெதுவாக தொடங்குவோம் என்பதை அறிவோம். ஆனால் இந்த முறை மிக நன்றாக தொடங்க வேண்டியது அவசியமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் நெருக்கடி அதிகமாக இருக்கத்தான் செய்யும். அதை திறம்பட சமாளிக்க வேண்டும். அணியில் சில மூத்த வீரர்களை (அம்லா, ஸ்டெயின், டிவில்லியர்ஸ் ஓய்வு) இழந்துள்ளோம். அதே சமயம் சில புதிய வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். மூத்த வீரர்களின் அனுபவம் அணியில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அந்த அனுபவத்தை நாங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் என்று நம்புகிறேன். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இது சிறந்த டெஸ்ட் அணியாக உருவெடுக்கும். அது தான் முக்கியமானது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது. இது வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. இந்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா போன்ற முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாடப்போவது சிறப்பான விஷயம். நாங்கள் நல்ல முறையில் தயாராகி இருக்கிறோம். நன்றாக விளையாடும் போது அது நம்பிக்கையை கொடுக்கும். இவ்வாறு பிலாண்டர் கூறினார்.

34 வயதான பிலாண்டர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 214 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.


Next Story