ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: கொல்கத்தாவில் டிசம்பர் 19-ந் தேதி நடக்கிறது


ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: கொல்கத்தாவில் டிசம்பர் 19-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 1 Oct 2019 11:00 PM GMT (Updated: 1 Oct 2019 9:01 PM GMT)

கொல்கத்தாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந் தேதி நடக்க உள்ளது.

புதுடெல்லி,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி அடுத்த ஆண்டு (2020) நடக்கிறது. இந்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெங்களூருவில் நடைபெறும் இந்த ஏலம் முதல்முறையாக கொல்கத்தாவில் நடக்க இருக்கிறது. தற்போது வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. வருகிற 14-ந் தேதி வரை வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

கடைசியாக 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அடுத்து 2021-ம் ஆண்டு வீரர்கள் ஏலம் பெரிய அளவில் அரங்கேறுகிறது. அப்போது ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். மற்ற வீரர்களை ஏலத்தில் தான் எடுக்க வேண்டும். எனவே இந்த முறை ஏலத்தில் சிறிய அளவில் தான் வீரர்கள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கடந்த ஆண்டு வைத்து இருக்கும் இருப்பு தொகையுடன் கூடுதலாக ரூ.3 கோடியை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி அதிகபட்சமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் ரூ.8.2 கோடி இருப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.3.2 கோடியும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ரூ.3.05 கோடியும் இருப்பு நிதியாக வைத்து இருக்கிறது.

Next Story