தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றி
x
தினத்தந்தி 10 Oct 2019 12:02 AM GMT (Updated: 10 Oct 2019 12:02 AM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றிபெற்றது.

வதோதரா,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் காயமடைந்த நட்சத்திர வீராங்கனை மந்தனாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனையாக பிரியா பூனியா இடம் பிடித்தார். இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 45.1 ஓவர்களில 164 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மரிஜானே காப் 54 ரன்கள் (64 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார். இந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.



 


அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (55 ரன்), பிரியா பூனியா (75 ரன், 124 பந்து, 8 பவுண்டரி) அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் 11 ரன்னுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த 23 வயதான பிரியா பூனியா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே 50 ரன்களை கடந்த 7-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பிரியா பெற்றார்.

இதே போல் இந்திய கேப்டன் மிதாலிராஜியும் சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆனார். சர்வதேச ஒரு நாள் போட்டியில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 36 வயதான மிதாலிராஜ் 1999-ம் ஆண்டு முதல், ஒரு நாள் போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story