தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தடுமாற்றம்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தடுமாற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2019 6:25 AM GMT (Updated: 19 Oct 2019 6:25 AM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது.

ராஞ்சி,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கியது.  இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்க் அகர்வால் 10 ரன்களில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் விராட் கோலியும் 12 ரன்களில் வெளியேறினார். 

இதனால்,  இந்திய அணி 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. துவக்க வீரர் ரோகித் சர்மாவும், ரஹானாவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இதனால், இந்திய அணி உணவு இடைவேளை வரை 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது. 

Next Story