வேறு வீரரை அழைத்து வந்தும் பலன் இல்லை: பிளிஸ்சிஸ்சை துரத்தும் ‘டாஸ்’ துரதிர்ஷ்டம்


வேறு வீரரை அழைத்து வந்தும் பலன் இல்லை: பிளிஸ்சிஸ்சை துரத்தும் ‘டாஸ்’ துரதிர்ஷ்டம்
x
தினத்தந்தி 19 Oct 2019 11:45 PM GMT (Updated: 19 Oct 2019 11:45 PM GMT)

நேற்றைய ராஞ்சி டெஸ்டில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் டாஸ் போடும் போது வேறு வீரரை அழைத்து வந்தும் பலன் இல்லாமல் போனது.


தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் தொடர்ச்சியாக டாசில் தோற்று வருவதால் நேற்றைய ராஞ்சி டெஸ்டில் டாஸ் போடும் போது துணை கேப்டன் டெம்பா பவுமாவையும் மைதானத்திற்குள் உடன் அழைத்து வந்தார். இந்திய கேப்டன் கோலி நாணயத்தை மேலே சுண்டி விட்ட போது, பவுமாவை பூவா, தலையா? கேட்க வைத்தார். ஆனால் இந்த முறையும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. பவுமாவின் கணிப்பு தவறாக, இந்திய கேப்டன் கோலி டாசில் ஜெயித்தார். பிளிஸ்சிஸ்க்கும் டாஸ் ராசிக்கும் எட்டா தூரம் என்பது போல் அனைவரும் கொல்லென சிரித்து விட்டனர்.

ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் போது இந்த மாதிரி தொடர்ந்து டாசில் தோற்றதால் பிளிஸ்சிஸ், டுமினியை டாஸ் கேட்க சொன்னார். அதில் வெற்றியும் கிடைத்தது. ஆனால் இங்கு டாஸ் விஷயத்தில் அவருக்கு துரதிர்ஷ்டமே தொடருகிறது.

ஆசிய கண்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி டெஸ்டில் தொடர்ந்து 10-வது முறையாக டாசில் தோற்றுள்ளது. இந்த வகையில் முந்தைய 9 டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்கா ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை (7-ல் தோல்வி, 2-ல் டிரா) என்பது நினைவு கூரத்தக்கது.


Next Story