சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா?


சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா?
x
தினத்தந்தி 21 Oct 2019 11:06 AM GMT (Updated: 21 Oct 2019 10:50 PM GMT)

சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், இந்திய தொடர் பாதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (நவம்பர்) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். முதல் தர போட்டிக்கான கட்டணத்தை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பயிற்சி உள்பட எந்தவொரு கிரிக்கெட் நடவடிக்கையிலும் பங்கேற்காமல் புறக்கணிக்க போவதாக வங்காளதேச டெஸ்ட் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் டாக்காவில் நேற்று அறிவித்தனர். இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் வங்காளதேச அணியின் இந்திய பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள் போராட்ட அறிவிப்பு தற்போது தான் எங்களுக்கு தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல தீர்வு காணப்படும்’ என்றார். இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இது வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் உள்விவகாரமாகும். இந்த சர்ச்சையின் முன்னேற்றம் குறித்து காத்து இருந்து உன்னிப்பாக கவனிப்போம். அவர்கள் பிரச்சினை குறித்து நமக்கு தெரிவிக்காத வரை நாம் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்றார். ‘வீரர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். வங்காளதேச கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை ரத்து செய்யாது’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story