விஜய் ஹசாரே கோப்பை யாருக்கு? தமிழ்நாடு-கர்நாடகா இன்று பலப்பரீட்சை


விஜய் ஹசாரே கோப்பை யாருக்கு? தமிழ்நாடு-கர்நாடகா இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 24 Oct 2019 11:55 PM GMT (Updated: 24 Oct 2019 11:55 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப்போட்டியில், தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோத உள்ளன.

பெங்களூரு,

18-வது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (காலை 9 மணி) நடக்கும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அரைஇறுதியில் குஜராத்தை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. தமிழக அணியில் பாபா அபராஜித் (532 ரன்), அபினவ் முகுந்த் (515 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். மிடில் வரிசையில் கேப்டன் தினேஷ் கார்த்திக், ஷாருக்கான் அதிரடியில் மிரட்டுகிறார்கள். பந்து வீச்சில் அஸ்வின், முகமது, டி.நடராஜன் வலு சேர்க்கிறார்கள். இது தவிர, முரளிவிஜய், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவ வீரர்களும் உள்ளனர்.

அரைஇறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஷ்காரை பந்தாடிய மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியும் சூப்பர் பார்மில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (546 ரன்), தேவ்தத் படிக்கல் (2 சதம், 5 அரைசதத்துடன் 598 ரன்கள்) மற்றும் மயங்க் அகர்வால், கருண் நாயர், ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் என்று அந்த அணியிலும் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை.

பலம் வாய்ந்த இரு அணிகள் மகுடத்துக்கு மல்லுகட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கர்நாடகாவுக்கு சாதகமான அம்சமாக இருக்கும்.


Next Story