ஷகிப் அல் ஹாசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தீவிரம்


ஷகிப் அல் ஹாசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தீவிரம்
x
தினத்தந்தி 26 Oct 2019 9:50 AM GMT (Updated: 26 Oct 2019 9:50 AM GMT)

ஷகிப் அல் ஹாசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

டாக்கா, 

வங்காளதேச  கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரும், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டனுமான ஷகிப் அல் ஹசன், சமீபத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், வங்காளதேச அணியின் இந்திய சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அவர்கள் வைத்த கோரிக்கைகளில் இரண்டை தவிர மற்றவை ஏற்கப்பட்டன.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாளில், பிரபலமான டெலிகாம் நிறுவனமான கிராமின்போன் நிறுவனத் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஷகிப் அல் ஹசன். பங்களாதேஷ் அணியில் ஆடும் கிரிக்கெட் வீரர்கள், டெலிகாம் நிறுவனங்களின் தூதராகக் கூடாது என்று ஒப்பந்தம் உள்ளது. அதை மீறி அவர் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதற்காக ஷகிப் அல் ஹாசனிடம் விளக்கம் கேட்டு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது. நோட்டீசுக்கு திருப்திகரமான விளக்கத்தை ஷகிப் அல் ஹாசன் அளிக்கவில்லை என்றால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. 

Next Story