ஐ.பி.எல். போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய முறை அமல்?


ஐ.பி.எல். போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய முறை அமல்?
x
தினத்தந்தி 4 Nov 2019 11:44 PM GMT (Updated: 4 Nov 2019 11:44 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

மும்பை,

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கும் வகையில் மாற்று வீரரை தேவையான தருணத்தில் களம் இறக்கும் புதிய முறையை அமல்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் ‘பவர் பிளேயர்’ என்ற முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத வீரர் ஒருவர் ஆட்டத்தின் சூழலுக்கு தேவைப்படும் நிலை ஏற்படும் போது களம் இறங்கி விளையாட முடியும். விக்கெட் விழும் போதோ? அல்லது ஓவர் முடிவின் போதே அந்த பவர் பிளேயர் களம் காண முடியும். உதாரணமாக கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்படும் நிலையில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஸ்செல் ஆடும் லெவன் அணியில் இடம் பெறாமல் வெளியில் இருக்கும் பட்சத்தில் அவரை பவர் பிளேயராக களம் இறக்க முடியும். பந்து வீச்சிலும் இதேபோல் வீரரை மாற்றம் செய்யலாம். எடுத்துக்காட்டாக மும்பை அணி கடைசி ஓவரில் எதிரணியை 6 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் அந்த அணியின் முன்னணி பவுலர் பும்ரா வெளியில் இருந்தால் அவரை களம் இறக்கி கொள்ள முடியும். இது குறித்து மும்பையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.


Next Story