இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 5 Nov 2019 11:26 PM GMT (Updated: 5 Nov 2019 11:26 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

நெல்சன்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்சனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. காலின் டி கிரான்ட்ஹோம் 55 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) மார்ட்டின் கப்தில் 33 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி டேவிட் மலான் (55 ரன்), ஜேம்ஸ் வின்ஸ் (49 ரன்) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பினால் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்களுடன் (14.4 ஓவர்) வலுவான நிலையில் இருந்தது.

அதன் பிறகு அடுத்த 18 பந்துகளில் 10 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தள்ளாடியது. அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி நேப்பியரில் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

Next Story