நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 10 Nov 2019 11:56 PM GMT (Updated: 10 Nov 2019 11:56 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றிக்கனியை பறித்தது.

ஆக்லாந்து,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. மழையால் 11 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. ருத்ர தாண்டவமாடிய தொடக்க ஆட்டக்காரர்களான மாட்டின் கப்தில் 50 ரன்களும் (20 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), காலின் முன்ரோ 46 ரன்களும் (21 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட் 39 ரன்களும் (16 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்துக்கு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஜானி பேர்ஸ்டோ 47 ரன்களும் (18 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), சாம் குர்ரன் 24 ரன்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தினர்.

பரபரப்பான கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷம் வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து டாம் குர்ரனின் (12 ரன்) விக்கெட்டை கபளகரம் செய்த நீஷம் அதன் பிறகு ‘பிடி’யை நழுவ விட்டார். அடுத்து களம் புகுந்த கிறிஸ் ஜோர்டான் 4-வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு திகைக்க வைத்தார். தொடர்ந்து 5-வது பந்தில் 2 ரன் எடுத்த அவர் கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி திரிலிங்கான இந்த ஆட்டத்தை சமனுக்கு (டை) கொண்டு வந்தார். அதாவது இங்கிலாந்தின் ஸ்கோரும் 11 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்களில் நின்று போனது.

இதையடுத்து வெற்றி - தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. பொறுப்பு கேப்டன் டிம் சவுதி பவுலிங் செய்தார். இதில் மோர்கன், பேர்ஸ்டோ தலா ஒரு சிக்சர் அடிக்க இங்கிலாந்து சூப்பர் ஓவரில் 17 ரன்கள் சேகரித்தது. பின்னர் 18 ரன்கள் இலக்கை நோக்கி சூப்பர் ஓவரில் பேட் செய்த நியூசிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 8 ரன்களே எடுத்தது. கிறிஸ் ஜோர்டான் கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தினார். சூப்பர் ஓவரில் வெற்றிக்கனியை ருசித்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இடையிலான இறுதிஆட்டம் ‘டை’யில் முடிந்து அதன் பிறகு சூப்பர் ஓவரிலும் சமன் ஆனதால் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து மகுடம் சூடியது. அதே போன்று இந்த முறையும் சூப்பர் ஓவர் வரை வந்தும் அதிர்ஷ்டம் இல்லாத நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் கோப்பையை கோட்டைவிட்டுள்ளது.

அடுத்து இங்கிலாந்து-நியூசிலாந்து இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 21-ந்தேதி மவுன்ட் மாங்கானுவில் தொடங்குகிறது.


Next Story