இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேச அணி போராட்டம்


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேச அணி போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2019 6:43 AM GMT (Updated: 16 Nov 2019 6:43 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேச அணி போராடி வருகிறது.

இந்தூர்,

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 150 ரன்னில் சுருண்டது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. 2 ஆம் நாளான நேற்று, மயங்க் அகர்வாலின் (243 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் , நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்து இருந்தது. ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கும் முன்பாகவே, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்து கொள்வதாக இந்திய அணி அறிவித்தது.  இதையடுத்து, 343 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய வங்காளதேச அணி பேட் செய்தது. அந்த அணி துவக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் தத்தளித்தது.  

உணவு இடைவேளை வரை வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 283 ரன்கள் பின் தங்கியுள்ளதால், வங்காளதேச  அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே கடுமையாக போராட வேண்டியிருக்கும். 


Next Story