கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி


கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி
x
தினத்தந்தி 24 Nov 2019 8:39 AM GMT (Updated: 24 Nov 2019 8:39 AM GMT)

கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா,

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. பகல்-இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 106 ரன்னில் சுருண்டது.

 பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி , விராட் கோலி சதம் (136 ரன்கள்) ரகானே, புஜாரா ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றின் உதவியால் வலுவான நிலையை எட்டியது.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது.

இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி, இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தது.  2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்த நிலையில், 3 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும்,  சீரான இடைவெளியில் வங்காளதேசம் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 41.1 ஓவர்கள் தாக்குப் பிடித்த வங்காளதேச அணி 195 ரன்களில் ஆட்டமிழந்தது.  இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.  வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றுள்ளது.

Next Story