‘டோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி வரை காத்து இருக்க வேண்டும்’ - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்


‘டோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி வரை காத்து இருக்க வேண்டும்’ - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:41 PM GMT (Updated: 26 Nov 2019 11:41 PM GMT)

டோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி முடியும் வரை காத்து இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

கொல்கத்தா,

இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. அதன் பிறகு நடந்த தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி தொடர்களில் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான 38 வயதான டோனி விளையாடவில்லை.

டோனி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. டோனிக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பரை தயார்படுத்தும் பணி தொடங்கி விட்டதாக தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு டோனி தற்போது தீவிர பயிற்சியை தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வென்ற பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டோனி மீண்டும் எப்போது விளையாட தொடங்குகிறார். ஐ.பி.எல். போட்டி தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார். மற்ற விக்கெட் கீப்பர்கள் எப்படி செயல்படுகிறார்கள். டோனி பார்ம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன்? என்பது குறித்து எல்லாம் பார்க்க வேண்டும். ஐ.பி.எல். மிகப்பெரிய போட்டி தொடராகும். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இறுதி செய்யப்படும். உலக கோப்பை போட்டிக்கு முன்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட கூட வாய்ப்பு இருக்கிறது. யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறித்து இப்போதே ஒவ்வொருவரும் கருத்து தெரிவிப்பதை விடுத்து டோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி (அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடக்கிறது) முடியும் வரை காத்து இருக்க வேண்டும். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தான் இந்திய 20 ஓவர் அணியில் இடம் பெறும் சிறந்த வீரர்கள் யார், யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஆனதும் முதலில் வாழ்த்து தெரிவித்தவர்களில் நானும் ஒருவன். இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் தலைவராக பொறுப்பு வகிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது முக்கியமான அம்சமாகும். கிரிக்கெட் களத்தில் வீரராகவும், கேப்டனாகவும் அசத்திய கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

கொல்கத்தாவில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை கங்குலி மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் சிறப்பாக செய்து இருந்தது. ரசிகர்கள் கூட்டம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. பிங்க் பந்தில் சில சாதகமும், பாதகமும் இருக்கிறது. பந்தின் தன்மை குறித்து வருங்காலங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.

ரிஷாப் பண்ட் இளம் வீரர். எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் கற்றுக்கொள்ள முடியும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. தவறு செய்வது இயல்பு தான். ஆனால் அந்த தவறை திருத்தி கொள்வது எப்படி என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது. அதேநேரத்தில் கடினமாக உழைப்பதுடன், அதிகமாக தியாகமும் செய்ய வேண்டும். அப்படி செயல்பட்டால் சிறப்பான நிலையை எட்ட முடியும்.

கடந்த 3 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியினர் களத்தில் வேகத்துடன், தீவிரத்துடன் செயல்படுவது நம்ப முடியாத வகையில் இருக்கிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கடந்த 5-6 ஆண்டுகளை திரும்பி பார்த்தால் தற்போதைய இந்திய அணி தான் மூன்று வடிவிலான போட்டியிலும் மிகவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

டோனியின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகே டோனி தனது எதிர்காலம் குறித்து தீர்மானிப்பார். டோனி போன்ற மிகப்பெரிய வீரர் குறித்து யூகங்கள் கிளம்புவது சகஜம். உடல்தகுதியை பொறுத்தமட்டில் அவர் நல்ல நிலையில் உள்ளார். கடந்த ஒரு மாத காலமாக அவர் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறார்’ என்று தெரிவித்தன.

ஆசிய லெவன் அணிக்காக டோனி ஆடுவாரா?

ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) மார்ச் 18 மற்றும் 21-ந் தேதிகளில் டாக்காவில் நடக்கிறது. இந்த போட்டியை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான ஆசிய லெவன் அணிக்காக விளையாட இந்திய வீரர்கள் டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இதனால் ஆசிய லெவன் அணிக்காக டோனி களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story