சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதி


சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 Nov 2019 11:26 PM GMT (Updated: 27 Nov 2019 11:26 PM GMT)

சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

சூரத்,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் சுற்று ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி, தமிழக வீரர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஜார்கண்ட் அணி 18.1 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சவுரப் திவாரி 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், எம்.அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய தமிழக அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹரி நிஷாந்த் 7 ரன்னிலும், ஷாருக்கான் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்னுடனும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்ற தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

Next Story