நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் சதம் அடித்தனர்


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் சதம் அடித்தனர்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:20 PM GMT (Updated: 1 Dec 2019 11:20 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் ஆகியோர் சதம் விளாசினர்.

ஹாமில்டன்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 375 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணியை கேப்டன் ஜோ ரூட்டும், ரோரி பர்ன்சும் கைகோர்த்து சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். தனது 2-வது சதத்தை அடித்த ரோரி பர்ன்ஸ் (101 ரன்) ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (26 ரன்), புதுமுக வீரர் ஜாக் கிராவ்லி (1 ரன்) நிலைக்கவில்லை. மறுமுனையில் ஜோ ரூட் 17-வது சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த 14 இன்னிங்சில் மூன்று இலக்கத்தை நெருங்க முடியாமல் நெருக்கடிக்குள்ளான ஜோ ரூட் இந்த சதத்தின் மூலம் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்.

இங்கிலாந்து அணி 99.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 114 ரன்களுடனும் (278 பந்து, 14 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ஆலிவர் போப் 4 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 106 ரன்கள் பின்தங்கியுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Next Story