சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: ஒரு ரன்னில் தமிழக அணி தோல்வி


சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: ஒரு ரன்னில் தமிழக அணி தோல்வி
x
தினத்தந்தி 1 Dec 2019 11:38 PM GMT (Updated: 1 Dec 2019 11:38 PM GMT)

சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சூரத்,

சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் சாம்பியன் மகுடத்துக்காக தமிழக அணி, நடப்பு சாம்பியன் கர்நாடகாவுடன் மல்லுகட்டியது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மனிஷ் பாண்டே 60 ரன்களும் (45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகன் கடாம் 35 ரன்களும், தேவ்தத் படிக்கல் 32 ரன்களும் விளாசினர். மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். தமிழகம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து கடின இலக்கை நோக்கி களம் புகுந்த தமிழக அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 20 ரன்னிலும், பாபா அபராஜித் 40 ரன்னிலும் வெளியேறினர்.

கடைசி ஓவரில் தமிழக அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. பரபரப்பான 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் வீசினார். இதில் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஆர்.அஸ்வின், 3-வது பந்தை அடிக்கவில்லை. 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதனால் 2 பந்துக்கு 4 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் (44 ரன், 27 பந்து, 5 பவுண்டரி) 2-வது ரன்னுக்கு ஓடிய போது ரன்-அவுட் ஆனார். அடுத்து முருகன் அஸ்வின் வந்தார்.

கடைசி பந்தில் தமிழக அணியின் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டது. இந்த பந்தை சந்தித்த முருகன் அஸ்வின் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து கால் அருகிலேயே கிடந்தது. எப்படியோ ஒரு ரன் மட்டும் ஓடி எடுத்தனர்.

இதனால் கர்நாடக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. தமிழக அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்களே எடுக்க முடிந்தது. ஏற்கனவே விஜய்ஹசாரே கோப்பை இறுதி ஆட்டத்திலும் தமிழக அணி கர்நாடகாவிடம் தான் தோற்று இருந்தது. இப்போதும் நூலிழையில் கோப்பை நழுவி போய் விட்டது.


Next Story