பும்ராவை சிறு குழந்தை எனக் கூறியதால் நெட்டிசன்களின் கேலிக்குள்ளான அப்துல் ரசாக் !


பும்ராவை சிறு குழந்தை எனக் கூறியதால் நெட்டிசன்களின் கேலிக்குள்ளான அப்துல் ரசாக் !
x
தினத்தந்தி 5 Dec 2019 9:24 AM GMT (Updated: 5 Dec 2019 9:24 AM GMT)

எனது பேட்டிங் முன் பும்ராவின் பந்து வீச்சு சிறு குழந்தை என்று அப்துல் ரசாக் தெரிவித்து இருந்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக், அவரது காலக்கட்டத்தில் உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார்.   பாகிஸ்தான் அணிக்காக 265 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ள அப்துல் ரசாக், 5080 ரன்களும்  269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2011 ஆம் ஆண்டோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல் ரசாக், 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில்,  பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அப்துல் ரசாக், இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை விமர்சித்து இருந்தார். “மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். எனவே, எனது  பேட்டிங் முன் பும்ரா பச்சிளம் குழந்தை” என்று அப்துல் ரசாக் கூறியிருந்தார். 

அப்துல் ரசாக்கின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. பல  முக்கிய போட்டிகளில் அப்துல் ரசாக் சொதப்பியதை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள்,  கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், முனாப் படேல் வீசிய  பந்தில் கிளீன் போல்டு ஆனார். 116 கி.மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட  அந்த பந்தில், அப்துல் ரசாக் ஆட்டமிழந்ததை, சுட்டிக்காட்டியும் நெட்டிசன்கள்  கிண்டலடித்து வருகின்றனர். 

Next Story