இலங்கை அணியுடன் மோதல்: பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடங்குகிறது


இலங்கை அணியுடன் மோதல்: பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 10 Dec 2019 11:39 PM GMT (Updated: 10 Dec 2019 11:39 PM GMT)

பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் நடக்கிறது. இலங்கை-பாகிஸ்தான் மோதும் இந்த டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது.

பாகிஸ்தான் மண்ணில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடப்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். 2009-ம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் விளையாடிய போது அந்த அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் இலங்கை வீரர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். இதன் பின்னர் பாதுகாப்பு அச்சத்தால் முன்னணி அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்தன. ஒரு சில குறுகிய கால தொடர்கள் அங்கு நடந்தாலும் அந்த அணிக்குரிய டெஸ்ட் போட்டிகள் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 10 ஆண்டுக்கு பிறகு மறுபடியும் இலங்கை அணி தைரியமாக பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இலங்கை வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தை சுற்றி ராணுவ ஹெலிகாப்டரும் வலம் வருகிறது.

இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி நேற்று நிருபர்களிடம் கூறுகையில் ‘இது வரலாற்று சிறப்பு மிக்க போட்டி. இந்த டெஸ்ட் தொடரை நினைத்து எங்கள் வீரர்கள் அனைவரும் பரவசத்துடன், உணர்ச்சிபெருக்கில் உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு சொந்த ஊர் மைதானத்தில் விளையாட இருப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த போட்டியில் இருந்து பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் வழக்கம் போல் நடைபெறும் என்று நம்புகிறேன். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் தோற்றோம். அந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். அப்போது தான் ரசிகர்களின் நம்பிக்கையை பெற முடியும்’ என்றார்.

உலக கோப்பை போட்டி வரை உங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர் இப்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக பொறுப்பு ஏற்று இருக்கிறார். அவர் இலங்கை அணியுடன் இருப்பது தொடரில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துமா? என்று அசார்அலியிடம் கேட்ட போது, ‘மிக்கி ஆர்தர் கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் அணியினருடன் இணைந்து பணியாற்றி இருப்பதால் எங்களை பற்றி அதிகமாகவே அவருக்கு தெரியும். ஆனால் நவீன கால கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை பற்றி எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னரை சீக்கிரம் வீழ்த்த திட்டம் வகுத்து இருந்தோம். ஆனால் அது கைகூடவில்லை. எனவே எங்களுக்கு எதிராக அவர் எத்தகைய யுக்தியை தீட்டினாலும் அந்த சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம்’ என்றார்.

இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கூறுகையில், ‘மிக்கி ஆர்தர் முன்பு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தவர். பாகிஸ்தான் அணியை பற்றி மிகவும் நெருக்கமாக அறிவார். அவர்கள் எந்த மாதிரி சிந்திப்பார்கள், எப்படி தயாராவார்கள் என்பது எல்லாம் ஆர்தருக்கு அத்துபடி. இது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். அதே நேரத்தில் களத்தில் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டியது முக்கியம். பாகிஸ்தான் மண்ணில் நான் முதல்முறையாக விளையாட உள்ளேன். அதுவே எனக்கு இந்த தொடரில் சாதிக்கும் உத்வேகத்தை அளிக்கிறது’ என்றார்.

1992-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அந்த பெருமையை இலங்கை அணி தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.

காலை 10.15 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஈ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 2 மற்றும் 3-வது நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது.

Next Story